Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label கசவனம்பட்டி சித்தர். Show all posts
Showing posts with label கசவனம்பட்டி சித்தர். Show all posts

Monday, October 31, 2011

கசவனம்பட்டி சித்தர்


கசவனம்பட்டி சித்தர்
ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 

29வது குரு பூஜைவிழா நாள் : 31-10-2011


கடந்த ஒரு வாரத்திற்கு முன்,  நான் ( வள்ளலார் தெய்வ நிலைய) அலுவலகப்பணியில் இருந்தபோது அன்பர் ஒருவர் நன்கொடை அளிக்கும் பொருட்டு அவரது ஊர் முகவரியை குறிப்பிட்டிருந்தார். முகவரியில் பழங்காநத்தம், மதுரை என்றிருந்தது.  மதுரை என்ற பெயரைக்கேட்டாலே எனக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தமான  உணர்வு  ஏற்படும். ஏனெனில், அந்த ஊரின் ஆன்மீக சக்தியை நான் மிக நன்கு உணர்ந்திருப்பவன். நன்கொடை கொடுக்க வந்த அன்பரிடம் மேலும் ஆன்மீக விஷயமாக பேச்சு கொடுத்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சித்தர்கள் ஜீவசமாதி கோயில்களை பற்றி சென்றது.  பேச்சு இடையில், திண்டுக்கல் பக்கத்தில் உள்ள கசவனம்பட்டி சித்தர் கோயிலுக்கு போயிருக்கின்றீர்களா? என்று அந்த அன்பர் கேட்டார். இல்லைங்க என்று நான் பதில் கூறினேன். 
மேலும் அவரிடம் அந்த சித்தர் பற்றி கேட்டதற்கு, அவர் எனக்கு முழுவிபரம் தெரியாது எனது நண்பர் அடிக்கடி சென்று வருவார் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் சென்றதிலிருந்து எனக்கு ஒரே தவிப்பு. கசவனம்பட்டி சித்தர்னா யார் அவர்? அவர் ‍எப்படி இருப்பார்? அவரின் வாழ்க்கை வரலாறு என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. சரி நெட்டில் தேடிப் பார்ப்போம் என்று நினைத்து, தேடாமலேயே விட்டுவிட்டேன்.  மூன்று நாட்கள் கழிந்திருக்கும். பணி நிமித்தமாக எனது அலுவலக நிர்வாக அதிகாரியின் அறைக்கு சென்றேன். அங்கு நிர்வாக அதிகாரியுடன் விழுப்புரம் & கடலூர் மாவட்ட ஆலய நிலங்களுக்கான தனித்துணை ஆட்சியர்( ஓய்வு) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.   மின்வெட்டு காரணமாக,  தனித்துணை ஆட்சியர் அவர்கள் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு விசிறிக்கொண்டிருந்தார்கள். விசிறிக்கொண்டிருந்த பேப்பரில் ஒரு உருவம் அசைந்தபடி இருந்தது. என் மனதில் ஒரு உருத்தல்.  சார் அந்த பேப்பரை கொஞ்சம் கொடுங்கள் என்றேன். அவர் பண்பாளர். உடன் கொடுத்துவிட்டார். வாங்கி அந்த உருவத்தை பார்த்தேன். மறு பக்கம் பார்த்தால் ஸ்ரீகசவன மெளன ஜோதி நிர்வாண சுவாமிகள் 29வது குரு பூஜைவிழா என்றிருந்தது.  சற்று அதிர்ந்து விட்டேன். எந்த சித்தரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து மூன்று நாட்களாக தவித்திருந்தேனோ,  அந்த சித்தரின் 29வது ஆண்டு குருபூசைப் பத்திரிக்கையின் கிழிந்த ஒரு பகுதிதான்  அது என்பதை அறிந்து எனக்கு தாங்கொணா மகிழ்ச்சி. பத்திரிக்கையின் இரண்டு பக்கங்கள் தான் இருந்தது. மீதி பக்கங்கள் இல்லை.   தனித்துணை ஆட்சியரிடம் ஐயா இந்த பத்திரிக்கை ஏது என்று வினவினேன். இங்கதாம்பா கிடந்தது என்றார். மீதி பத்திரிக்கை எங்கே என்று கேட்டேன். எனக்கு தெரியாது என்று பதிலளித்தார். உடன் கிழிந்த பத்திரிக்கையை புரட்டி பார்த்தபோது கடைசியில் சித்தர்கோயிலின் வெப்சைட் முகவரி அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த முகவரிக்கு இணையத்தில் சென்று பார்த்தபோது குருபூஜை பற்றிய  முழுவிபரம் தெரிந்தது. சித்தரின் ஜீவசமாதி இருப்பிடம் பற்றிய  விபரமும் தெரிந்தது. 



இந்த நிகழ்வின் மூலம் கசவனம்பட்டி சித்தரின் அருளாற்றலை எளிதில் என்னால் உணர முடிந்தது. யாரோ ஒரு அன்பரின் மூலம் கசவனம்பட்டி சித்தர் என்று கேள்விப்பட்டு, அவரைப்பற்றிய  விபரத்தை ஒரு கிழிந்த பத்திரிக்கையின் மூலம் தனித்துணை ஆட்சியரின் கையில் அசைந்ததின் மூலம் , நீ என்னைத் தேடவேண்டாம் நான் இங்கிருக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி, அருளிச் செய்த விதம் என்னை  வியப்பில்  ஆழ்த்தியது. 
எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல்  அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும். இது எனது பல்வேறு அனுபவத்தில் உண்மையாக நான் கண்டது. 
மறுமுறை நான் மதுரை செல்லும் போது அப்படியே திண்டுக்கல் சென்று கசவனம்பட்டி சித்தரின் ஜீவசமாதிக்கு சென்று வரவேண்டும் என்று எண்ணியுள்ளேன். அவரின் அருளாசி கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோமாக. 


ஏன் இந்த சித்தர் நிர்வாணமாக இருந்தார்?. நிர்வாணத்தின் தாத்பரியம் என்ன? இந்து மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்புகள் உள்ளதா? இந்தியாவில் உள்ள பிற மதத்தில் நிர்வாணம் பற்றிய குறிப்பு என்ன? இந்து மதம் நிர்வாணத்தை ஒப்புக்கொள்கின்றதா? என்பதை பிற்பாடு சமயம் வரும்போது பார்ப்போம். 


கசவனம்பட்டி சித்தர் திருக்கோயில் 
இணைய தள முகவரி www.kasavanam-siddhar.org

( இந்த பதிவினை நேற்றே (30.10.11 அன்று) பதிவிட இருமுறை முயற்சித்தும் சில தடைகளால் மு‍டியவில்லை. தற்போதுதான் முடிந்தது)