Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, September 7, 2010

சிவயோகசாரம்02


வணக்கம், சிவயோகசாரம்01 இடுகை வெளியிட்டு 10 நாள்களாகிவிட்டது.
எனது நண்பர் ‍‍ஜெகதீஸ்வரன் நீங்கள் புதிய இடுகையை விரைவில் வெளியிடுங்கள், நீண்டநாட்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அன்போடும், உரிமையோடும் கடிந்துகொண்டார். அவருக்கு இந்த வலைப்பதிவின் மீதுள்ள அக்கறைக்கு நன்றி. இனி இதுபோன்று நீண்டநாட்கள் ஆகாது என்பதை இவ்வலைப்பதிவுக்கு வந்து செல்பவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்து,
திரு. டுபாக்கூர் பதிவர் அவர்கள் மேற்படி சிவயோகசாரம்01 இடுகை குறித்து பின்வருமாறு கருத்துரை கூறியுள்ளார். கருத்துரைக்கு நன்றி.
கருத்துரை பின்வருமாறு //..உங்களிடம் இருக்கும் ஒரு நூலினை ஈயடிச்சான் காப்பியாக டைப் செய்து போடுவதில் எந்த பலனும் இல்லை. அதற்கு ஒரு நல்ல தட்டச்சரே போதுமானது. நீங்கள் உங்களைப் பற்றிக் கொடுத்திருக்கும் இத்தனை பெரிய பில்டப்புகளினால்....இந்த நூலினை நீங்கள் உள்வாங்கியதன் புரிதலை சமகால எழுத்து நடையில் பதிய முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்.....//
அவருக்கும், இதேபோன்று கருத்துடையவர்களுக்கும் எனது பணிவான பதில் இதோ கீ‍ழே கொடுத்துள்ளேன்.

என்னைப்பற்றிய சில விபரங்களை எனது Profile-ல் கொடுத்துள்ளேன். பார்த்து அறிந்துகொள்ள வேண்டுகின்றேன்.
எனது முதன்மை நோக்கம் - அழிந்து வரும் பழைய ஆன்மீகம், சித்தர் கலைகள் சம்பந்தப்பட்ட நூல்கள், மெய்ச்சாத்திரங்கள் போன்றனவற்றை மேற்படி நூல்களின் ஆசிரியர்கள் கூறியவற்றை எவ்வித மாற்றமும் இல்லாமல் (சீர்வரிசை. நேர், நிரை, இலக்கணங்கள் பழைய தமிழ்வசன நடை இவற்றினை) உள்ளது உள்ளபடியே ஒரு நல்ல தட்டச்சனாக செயல்பட்டு பிற்கால சந்ததியினருக்கு மின் நூல் வடிவில் வெளியிடவேண்டும் என்பதாகும்.
காரணம் என்னவெனில் இன்றைக்கு நாம் வாசிக்கும் திருவாசகம் சிவபுராணம் நூலில் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்று வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதற்காக சீர்களை குலைத்து வெளியிட்டு உள்ளனர். இது தெரியாமல் நான் சிவபுராணத்தை ஆயிரக்கணக்கில் அருட்சிவஞானபீடம் சார்பில் அச்சடித்து சிவனடியார்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டேன்.
சமீபத்தில் ஒரு உறவினர்வீட்டுக்கு (இறுதி மரியாதை செலுத்துவதற்கு) சென்றிருந்தேன். அங்கு உறவினர் ஒருவர் சிவபுராணம் படித்துக்கொண்டிருந்தார். வாங்கி பார்த்தபோது அது பழையகாலத்து சிவபுராணம் நூல் என்று தெரியவந்தது. அதில் சிவபுராணம் வரிகளை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். காரணம் சீர்முறை வேறாக இருந்தது. எனக்கு என்மீதே வருத்தம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை சீர்குலைத்து அச்சடித்து வெளியிட்டுவிட்டோமே, இதுவா நாம் மாணிக்கவாசகருக்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு என்று வேதனைப்பட்டேன். அதன்பிறகு மேற்படியான நூல்களைப்போன்று உள்ள பழைய நூல்களை அந்நூலில் உள்ளதைப் போன்று அப்படியே வெளியிட முடிவு செய்தேன். ( காப்பி ரைட்ஸ் இல்லாத, இதுவரை மின்நூலாக வெளிவராத நூல்கள் இருந்தால் தெரிவியுங்கள். அவற்றை தேடிக்கண்டுபிடித்து மின்நூலாக்க உதவுகின்றேன்)
அந்நோக்கத்தின் முதல் நூலே சிவயோகசாரம் தொடர்.
இந்நூலினை நான் கற்று உணர்ந்தேனா?. ஆம். (இதற்கு எனது முந்தைய இடுகைகள் பதில்அளிக்கும்)
பின்னர் ஏன் உங்களுடைய நடையில் வெளியிட தயக்கம் எனில்?., தயக்கம் இல்லை. எளிமையாக உள்ள இந்நூலுக்கு விளக்கம் தேவையில்லை என்றுதான் நான் படித்து உள்வாங்கிய விஷயத்தை எனது நடையில் சொல்லவில்லை. உள்வாங்குதல் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனாலும் ஆங்காங்கே தேவைப்படும் இடத்தில் எனது விளக்கம் வெளிப்படும்.
 

( குறிப்பு : இனி எனது எழுத்துக்கள் நீல நிறத்திலும், சிவயோகசாரம் நூலின் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் வித்தியாசத்திற்காக காட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். )





சிவயோகசாரம்02
குரு வணக்கம்
எண்சீர் விருத்தம்
 
ஆரணசாத் திரமனைத்தும் உணர்ந்து சீடர்
         அவித்தையெலாம் அகற்றியருள் புரியும் ஞான
பூரணணா யெழுந்தெளியேற் குபதே சித்துப்
          பூரணா னந்தனென நாமந் தந்த
நாரணதே சிகனாமென் குருநா தன்றன்
           நளினமல ரடியிணையைச் சிரமேற் கொண்டு
தாரணியிற் சிவயோக சார‍ மென்னுந்
           தகைபெறுமிந் நூலடியேன் சாற்ற லுற்றேன்.
 
இவ்வுலகத்திலுள்ள மெய்ச்சாத்திரங்கள், நான் யார்?. என்று அறிதற்குண்டான நூல்கள், யோகம், ஞானம், பக்தி, கர்மம் போன்ற வழிவகைகளை கற்று உணர்ந்து, அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தினை அடைய விரும்புகின்ற என்னுடைய ( சீடர்களின், மனிதர்களின்) அவித்தையாகிய மலபாசம், ஊழ்வினை, மன இருள் அனைத்தையும் நீக்கி, அருள்புரியும் பரமஞான பூரணணாய் எழுந்து, எளியேனாகிய எனக்கு அவித்தை அகல உபதேசித்து, பூரண ஆனந்தன் ( நிறைந்த ஆனந்தமுடையவன்) என்று தீட்சா நாமம் சூட்டிய ஸ்ரீநாராயண தேசிகன் என்னும் எனது குருநாதரின் நளினமுடைய, அழகான, மெல்லிய மலரடிகளை (திருவடிகளை) எனது சிரசின் மேல் வைத்துக்கொண்டு, இவ்வுலகத்திற்கு சிவயோகசாரம் என்னும் இந்த நூலினை (சிவயோகத்தை போதிக்க வல்ல தகைமையுடைய நூலினை) இயற்றுகின்றேன்.

தொடரும்...

4 comments:

  1. படுபாவிSeptember 8, 2010 at 1:31 PM

    வாழ்த்துக்கள் சித்தர் அவர்களே தொடர்ந்து பெரிய இடைவெளி விடாது எழுதுங்க

    ReplyDelete
  2. அருட்சித்தர் அவர்களுக்கு, இந்த வேலை எதுக்குங்க.. எளிய முறைல விளக்கம் எழுதுங்க.. கொஞ்சம் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்..

    ReplyDelete
  3. மீண்டும் கண்ணை கூசவைக்கும் நிறத்தில் எழுத்துக்கள்...உங்கள் பதிவு, உங்களின் எண்ணம் எனவே இது குறித்து இனி கருத்துச் சொல்வதாயில்லை.

    எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்..

    எனக்குத் தெரிந்து சித்தர்களாய் அறியப் படும் எவரும் தங்களை சித்தன் என்று சொல்லிக் கொண்டதாய் தெரியவில்லை. மேலும் சித்தர்களின் பாடல்களில் கூட தங்களின் குருநாதர்களின் பெயரைத்தான் சொல்லியிருக்கின்றனரே தவிர அவர்களை சித்தர்கள் என்று அடைமொழியோடு சொன்னதில்லை...அப்படி இருக்க உங்களை நீங்களே சித்தர் எனச் சொல்லிக் கொள்வது அபத்தமாக இல்லையா?

    ReplyDelete
  4. நல்ல பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள். சோர்வுறாமல் தொடர்ந்து செயலாற்றுக. வாழ்க, செழிக்க.

    அன்புடன்
    ரமணன்

    ReplyDelete